குருமகாத்மீயம் – ராமபாணம் , கிருஷ்ண சுதர்ஷனம், வேலவனின் செங்கோல்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

இடைக்காடர் சித்தர் அருளியது

ஒவ்வொரு யுகங்களிலும், யுகத்தின் பரிபாலனத்திற்கு பிரம்ம அஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.

ராமர் வாழ்ந்த காலத்தில், ராமபாணம் என்ற பிரம்ம அஸ்திரமானது இந்த தரணியை ஆண்டது போல, திரேதா யுகத்திலே கிருஷ்ணனின் சுதர்ஷன சக்கரம் இந்த உலகத்தை ஆண்டது போல், இந்த கலியுகத்திலே, செங்கோலாம், உன்னத ஒளி நிறைந்த இந்த கோலானது, இந்த தரணியை மட்டுமின்றி இந்த வையகத்தையே நிலைப்படுத்தச் செய்யும்.

ராம பாணம் கிடந்த நிலையிலும், சுதர்ஷன சக்கரம் சுழன்ற நிலையிலும் இருந்தது.

ஆனால் இந்த செங்கோல், விண்ணை நோக்கி, விண்ணுயர்த்தி நிற்கின்ற அற்புத நிலையாகும்.

ஒரு வித்தகன், நாணிலே அம்பை பூட்டி எய்யும் பொழுது, அந்த அம்பானது கிடந்த நிலைகளில் செல்கிறது.
சுதர்ஷன சக்கரம் உருண்ட நிலைகளில் செல்கிறது.

ஆனால் இந்த மனித குலத்தினுடைய மூங்கிலாய் விளங்குகின்ற முதுகு தண்டின் வழியாக, அந்த உணர்வை தனது உச்சியில் தழைக்கச் செய்தால், அவர்கள் செங்கோலுக்கு இணையான விண்ணுயர்ந்த, விண்ணோக்கிய நிலைகளுக்குச் செல்வார்கள்.

கலியுகத்தில் நீச்ச குணத்தில் இருந்த மனிதர்களை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்தி, ஈசத்துவம் என்ற உச்சியைக் கடந்த நிலையை உணர்த்துவது இந்த செங்கோலாகும்.

அனைத்து அஸ்திரங்களிலும் ஒளியானது முனையிலே நிற்கின்றது.

இவ்வாறு கிடந்த நிலையிலும், சுழன்ற நிலையிலும் நின்ற அந்த ஒளி, தற்போது நிலைத்த நிலையில் அந்த பிரம்மத்தை நோக்கி நிற்கின்றது.

ஆக இந்த செங்கோலின் தர்மம், ஏகம் என்ற ஒளியின் தன்மையை, ஒரு மனிதன் தனது அஷ்டத்திலே பூட்டி, அதை நவத்திலே பிரகாசிக்கச் செய்து அதை பிரகாசிக்கும் ஒளியோடு இணைப்பதே ஆகும்.