குருமாகாத்மீயம் – பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை

சத்குருவே சரணம்! சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

பிராணனை மகாபிராணசக்தியாக மாற்றும் பிரயோக முறை

முக்கண்ணன் வகுத்த இந்த சர்வ சக்தி சித்தி மந்திரங்களை, இந்த மெய் உணர்வை உணர்ந்து ஓதும்பொழுது, இந்த அக்ஷரத்தின் உள்ளே இருக்கின்ற நாத சக்தியானது, பூரணமாக அந்த நாதத்திலே ஆவாகனம் ஆவதற்காக ஒரு காப்பினை ஏற்படுத்த வேண்டும்.

அதற்குதான் இந்த வசம்பு என்ற ஒன்றை உங்களுடையஉச்சியெனும் அஷ்டத்திலோ, அல்லது கையிலே வைத்துக்கொண்டு, முக்கண்ணன் வகுத்த இந்த மகாவேதத்தை உச்சரிக்க, உங்களின் நாவிலிருந்து வெளிவருகின்ற அந்த நாதம், நாதத்தில் இருந்து வெளிவருகின்ற அந்த உயிர் சக்தியானது, பிராணனோடு இணைந்து, பிராண சக்தியாக மாறி நீங்கள் இருக்கின்ற இடம், அது விரிந்து, பல பர்லாங்கு தூரம் ஒரு நன்மையை ஏற்படுத்தும்.

நாயுருவி என்ற விருட்சத்தின், தண்டை சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதை வாயில் வைத்துக்கண்டு, சரியாக 45 நிமிடங்கள் எந்த ஒரு அசைவும் இன்றி, முக்கண்ணன் பதித்த அந்தப் உணர்வு நிலையில் நின்று, நிலைநிறுத்தி, முடித்தபிறகு, வாயில் இருக்கின்ற அந்த சிறு துண்டை எங்கேயாவது வீசிவிட்டு, பின்னர் உங்களுடைய கடமைகளை ஆற்ற, இவ்வாறு செய்து வர உங்களின் நாவில் இருந்து எழுகின்ற ஒவ்வொரு சொல்லும் ஒளி சக்திகளை ஈர்த்த நிலைகளாக வெளிப்படும்.

மனம் மயங்கும் கீழ் நிலை மயக்கங்கள்

ஒரு மனிதன் மது, மாது, புகழ், அதிகாரப் பசி, காந்தர்வம் என்ற செல்வம் என்ற கீழ்நிலை மயக்கங்களில் ஈடுபடுவானாயின், அந்த பற்றிக்கொண்ட மயக்கத்திலிருந்து அவர்களின் மனம் எளிதாக விட்டு செல்ல முடியாது.

அவர்களின் உடல் அமைப்பு உயிர் ரசத்தை அதிகப்படியாக இழந்ததால்,அவரின் மனம் கெட்ட நிலைகளில் இருக்கும்.

இந்த மது மயக்கத்தில் உட்பட்டவர்களுக்கு, சந்திரனின் அதிர்வு உடலில் சரியாக சமன்பாடில்லாத காரணத்தால், தன் அறிவின் முதிர்ச்சியானது மயக்கமாக மாறுகிறது. அதுவே மது என்ற நிலைக்கு மூலகாரணம்!!

இந்த கீழான பழக்கத்திலிருந்து விடுபட வழிமுறைகள்

1. இவ்வாறு இருப்பவர்கள், சுவாதி என்ற இரண்டாம் உயிர் மையத்தை நன்றாக முறைப்படுத்தி, தன் சுயஒழுக்கத்தை மீண்டும் பெறவேண்டும் என்ற சங்கல்பத்தை மேற்கொள்ளுதல்.

2. இரண்டாவதாக, சந்திரனின் ஒளி அலைகள், தன் உச்சியின் வழியாக, உடலில் ஆழ ஊடுருவிச் செல்லும் நிலைகளையெல்லாம் ஏற்படுத்திக் கொள்ளுதல்.

3. வசம்பு என்ற அற்புதமான மூலிகையை, கருப்பு எள்ளாலான எண்ணெயிலே தோய்த்து, மஞ்சள் பொடியை கலந்து, ஜோதியில் காட்டி, இந்த வாசனையை நுகந்து வர, மூளையில் ஏற்பட்டிருக்கும் பதிவுகள் மாய்ந்து, நற்பதிவுகள் பதியும் சூழல் ஏற்படும்.

4. யார் இந்த பழக்கத்தில் அடிமைப்பட்டிருக்கிறாரோ, அவர்களின் மனம் இந்த பழக்கத்திலிருந்து வெளிவரவேண்டும் என்ற உயர்ந்த சித்தாந்தமும், சிந்தனையும் ஏற்பட்டால் மட்டுமே, இவைகள் அனைத்தும் சித்தியாகும்.

எல்லா மயக்கத்திலே கிடைக்கின்ற சந்தோஷத்தை விட, மெய் உணர்வு எனும் பேர்மயக்கம், மகாமயக்கத்தில் ஒரு மனிதன் வசிக்க ருசிக்கத் துவங்கினால், இந்த கீழ் மயக்கங்களிலிருந்து விடுபட்டு, அவர்களுக்கு அனைத்தும் வசமாகும்.