குருமகாத்மீயம் – நீங்களே சுயப்பிரகாசமானவர்கள்!

சத்குருவே சரணம்! சந்தோஷம்!
(இடைக்காடர் சித்தர் அருளியது)

இந்த உலகிலே மகாசக்தியினுடைய தோற்றம் அழகின் அவதாரமாகும்.

அந்த அழகைக் கண்டவர்கள், அதனை வர்ணிக்க, பாழாய் போன மனிதர்கள் அந்த வர்ணித்த நிலையை பிடித்துக் கொண்டார்கள்.

சத்தியவதிகளை வணங்கி, சத்தியத்தை வணங்க மறுக்கிறார்கள்.

உண்மை என்ற ஒரு நிலை இருந்த காரணத்தால், அதனை பற்றி வாழ்ந்தவர்கள் உண்மை புருஷர்கள்.

ஆனால் நாமோ உண்மை புருஷர்களை பற்றுகிறோமே தவிர உண்மையை பற்றவில்லை.

அந்த உண்மை புருஷரைப் போல் நாம் ஆகவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றுகிறது. அது தவறான கண்ணோட்டமாகும்.

(நாடாளும் யோகமிருக்கும் மனிதனை, ஒரு நல்ல வீரமங்கைக்கு கணவனாக்கி, அந்த வீரமங்கைக்கு பணிவிடை செய்யச் சொன்னால் அது எப்படி சாத்தியமாகும்?)

யாராகவும் நீங்கள் திகழ வேண்டியதில்லை.

உங்களுடைய சுய பிராப்தத்திலே நீங்கள் திகழ வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இதுவே மற்ற வம்சத்தினருக்கும், இந்த பரஞ்சோதி வம்சத்தினருக்கும் இருக்கின்ற மாபெரும் வித்தியாசமாகும்.

முக்கண்ணன் எப்பொழுது உங்களின் முச்சந்தியிலே ஒளி பிரதமையை பதித்தாரோ, அப்பொழுதே உங்களது சுய பிராப்தம் மேலோங்கி செல்ல ஆரம்பித்து விட்டது.

நீயே சுயப்பிரகாசன் என்ற பொழுது, நீ ஏன் மற்ற சுயப்பிரகாசத்தை பார்த்து அதுவாக வேண்டும் இதுவாக வேண்டும் என்ற எண்ணத்தை கொள்கின்றாய்??

அதுவாக வேண்டும், இதுவாக வேண்டும் என்ற எண்ணத்தை விடுங்கள்.

ராமர் அவரைப்போலும், கிருஷ்ணர் அவரைப்போலும் இருந்து அவர்களது தர்மத்தை முடித்துச் சென்றார்கள்.

நீங்கள் நீங்களாக இருப்பதே உங்களின் தர்மம்.

சுயப்பிராப்தம் வீரம், அமைதி, அன்பு, இதன் மூலம் பொறுமை என்ற நிலைகளில் இருக்கிறது.