குரு மகாத்மீயம் – குரு மந்திரம் “ஓம் பரஞ்சோதி மம!”

சத்குருவே சரணம் ! சந்தோசம் !

இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது

எண்ண மாசுக்கள்
பிரபஞ்சத்தில், மக்களின் எண்ணங்களால் ஏற்படுகின்ற மாசுக்களை மக்கள் மனது வைத்தாலன்றி, எவ்வளவு குருக்கள், சித்த லோகங்கள் உருவாகினாலும், எவராலும் இதனை அகற்ற இயலாது.

இந்த மாசுக்களால், கோள்கள் சுருங்கி தனது பொலிவை இழக்கிறது.

இதன் மூலம் விண்ணிலிருந்து வருகின்ற அற்புத சக்திகளை ஈர்க்கின்ற மனிதனின் நிலைகளும் சற்று சுருங்குகிறது.

பூமியிலே இருக்கின்ற அற்புதமான  சக்தியானது மேல்நோக்கி எழுப்புவதற்கு சற்று சிரமப்படுகின்ற காரணத்தால், இந்த சக்தியானது ஏதாவது ஒரு மையத்தில்  நிலைகொள்கிறது.

இவ்வாறு இந்த சக்தி மேல்நோக்கிய நிலையாகவும், கீழ்நோக்கிய நிலையாகவும்  இருக்கிறது.

சக்தியின் ஒரு நிலை ஆரோகணம் (மேல்நோக்குகின்ற நிலை)
சக்தி ஆரோகணமாக செயல்படும்பொழுது, ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்தி, தனக்குத் தேவையான சுய ஆதாயங்களையெல்லாம் பெறுகின்ற காலமாக விளங்குகிறது.

அம்மாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சக்தியை மேலேற்றி,

‘ப’ என்கின்ற அட்சரம் மூல அக்னியாய்,
‘ர’ என்கின்ற அட்சரம்  நீராய்
‘ஞ்’ என்கின்ற அட்சரம்  அக்னி தத்துவமாய்
‘ஜோ’ என்கின்ற அட்சரம் காற்றின் தத்துவமாய்
‘தி’ என்கின்ற தத்துவம் விண் தத்துவமாய்
‘மம’ என்கின்ற தத்துவத்தில் ‘ம்’ ஞானத் தத்துவமாய், ‘அ’ ஆத்ம தத்துவமாய், பிரபஞ்சத்தின் மூலமாய் விளங்குகின்றது.

ஆக ஜீவனின் மூலத்தை பரத்தின் மூலம், அதாவது  சஹஸ்ரதளத்தோடு  இணைக்கும்பொழுது,  பரத்தின் மூலமானது சற்று மேலோங்கி,  பிரகாசமாய் விளங்குகின்ற பரஞ்ஜோதி எனும் உன்னத சக்தியோடு, சூக்குமத்தோடு இணைகிறது!

ஒன்றும் எட்டையும் நன்றாக பதப்படுத்தும் பொழுது, ஒன்பது என்கின்ற நவக்கூட்டு. இந்த நவக்கூட்டே நவமாய், நவசக்தியாய், பால்வெளி மண்டலங்கள், நட்சத்திர மண்டலங்கள், ராசி மண்டலங்கள் என எங்கும் எதிலும் வியாகூல நிலைகளுக்கு உங்களை சற்று உயர எடுத்துச்செல்கிறது.

சக்தியின் அவரோகணம் (கீழ் இறங்குகின்ற நிலை)

அவரோகணத்தில் மனிதனின் எண்ணமானது சற்று கீழிறங்கி, வேண்டாத மார்க்கங்களிலே செல்லும் நிலை ஏற்படுகிறது.

இந்த பரஞ்சோதி தத்துவத்தை அவரோகணம் முறையில்,  பௌர்ணமியிலிருந்து அம்மாவாசை வரை இறங்குபடியாக,

‘ப’ என்கின்ற அட்சரம் பரத்தைக் குறிக்கின்ற அட்சரமாக, உச்சியில் பயன்படுத்தி,

‘ர’ என்கின்ற அட்சரம், இருளை நீக்குகின்ற அட்சரமாக ஆக்கினையிலே பயன்படுத்தி,

‘ஞ்’ என்கின்ற அட்சரம் நஞ்சை நீக்குகின்ற அட்சரமாக கண்டத்தில் பயன்படுத்தி,

‘ஜோ’  என்கின்ற அச்சரம், வாயு மண்டலத்தில் இருக்கின்ற அல்லாத வாயுக்களை நன்றாக நீக்குகின்ற ஓர் அட்சரமாக அனாகதத்தில் பயன்படுத்தி,

‘தி’ என்கின்ற அட்சரம், அக்கினியின் தன்மை கொண்ட அட்சரமாக மாறுகிறது. அதை மணிப்பூரகம் என்ற மூன்றாவது ஆரத்திலே நன்றாக பயன்படுத்தி,

‘ம்’ என்கின்ற அட்சரமானது உயிர் மைய்யத்திற்கு ஆதி; உயிர் மைய்யத்திற்கு வேறாய் விளங்குகின்ற ஸ்வாதிஷ்டானத்தில் பயன்படுத்தி,

‘அ’ என்கின்ற அட்சரத்தை நாம் மூலத்திலே பயன்படுத்தி, பிரபஞ்சத்தில் இருக்கின்ற மாபெரும் விண் சக்தி, பிரபஞ்ச சக்தி, பரஞ்சோதி எனும் உன்னத சக்தியானது, உங்களின் உடல் முழுவதும் நன்றாக பரவி, ஆழ ஊடுருவி, ஜீவன் என்கின்ற மூலத்தோடு, பரம் என்கின்ற மூலம் அங்கே கலக்கின்றது! பரமூலம் என்கின்ற மாபெரும் சக்தி அங்கே கிடைக்கிறது!

இவ்வாறு இணைய, மனிதனின் உயிர் நிலையில் சாந்தி கிடைக்க, அந்த சாந்தியானது, மனிதனை அரக்க குணத்திலிருந்து விலக்கி, பண்புள்ள, அறிவுள்ள, ஆற்றல் மிகுந்த மனிதனாய், குருவை வணங்குகின்ற ஒரு மனிதனாய், தெய்வ மனிதனாய் மாற்றும்!

இதுவே சக்தியின் அவரோகண நிலையை முறைப்படுத்துகின்ற வித்து!

குருவின் நோக்கம்
நீங்கள் ஒரு வருடத்திற்கு மூன்று உயிருக்கேனும் பரஞ்சோதி மமஹ: என்கின்ற அட்சரத்தை, அதன் செவிகளில் சொல்லுவீர்களானால், அந்த உயிரை அடுத்த  நிலைக்கு  உயர்த்திச் செல்லும்.

உனது குருவின் நோக்கம் குருவின் எண்ணம், அவனுடைய சிருஷ்டி, மனிதர்களை உருவாக்கியது மட்டும் அல்ல, அறுபத்திநான்கு விதமான சக்திகளை, இயக்கங்களை, சூன்யங்களை, மாபெரும் பிரம்மத்தை அங்கே ஏற்படுத்தினான்.

அப்பேற்பட்ட சிருஷ்டியில் உருவானதே இந்த ஜீவ ராசிகள்.

ஆகவே இந்த ஜீவ ராசிகளையும் உயர்த்துகின்ற கடமை உங்களுக்கு இருக்கிறது.
அதை ஒருபோதும் மறவாதீர்கள்!!

நீங்கள் சற்று கடந்து சிந்தித்து, குருவின்  சிந்தனையை, எண்ணத்தை, ஆசைகளை, அபிலாஷைகளை, குரு வந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.

அதுவே உங்களினுடைய பிறப்பின் ரகசியமாகும்!

ஆகவே குருவின் கட்டளைகளை எடுத்துச் செல்லுங்கள்!
குருவின் எண்ணத்தை எடுத்துச் செல்லுங்கள்! குருவின் சொல்லை எடுத்துச் செல்லுங்கள்! குருவின் மந்திரத்தை எடுத்துச் செல்லுங்கள்! குருவின் அற்புதத்தை எடுத்துச் செல்லுங்கள்!
குருவின் வாக்கியத்தை எடுத்துச் செல்லுங்கள்! குருவின் எல்லாவற்றையும்  எடுத்துச் செல்லுங்கள்!

வீணாக புறம்பேசி அலைந்து, பிறர் குடி கெடுத்து வாழ்வதை  விட உன் நாவால், உன் எண்ணத்தால், உன் அறிவால், உனது குருவை சிந்தித்து, உன் குருவின் திருவிளையாடல்களை, உன் குருவின் மஹாத்மியத்தை ஏதேனும் ஒரு உயிருக்கேனும் நீ அர்பணித்தல் அந்த புண்ணியமே  உன்னை காத்து, வாழ்நாளிலே  அந்த புண்ணியமே உன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்!
எடுத்துச் செல்லும்!!

சந்தோசம்!!