குருமகாத்மியம் – குரு திருவிளையாடலின் தாத்பரியம்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது)

எத்தனையை இழந்தாலும், குரு என்று நீங்கள் கண்டெடுத்த முத்தை மறவாதீர்கள்.

ஏனென்றால் நீங்கள் சேற்றில் உதித்த செந்தாமரை என்ற நிலைகள் உங்களுக்குள் ஏற்படவேண்டும்.

அத்தகைய கர்ம பிராப்தத்தை கடந்து, ஊழ்வினைகளைக் கடந்து நீங்கள் இந்த மொழியை கேட்கிறீர்கள் என்றால் சற்று உற்று, உங்கள் விதியின் அளவீடுகளை இறைவன் உங்களின்பால் கொள்ளுகின்ற அன்பை நோக்கி பாருங்கள்.

இதுவே உனது குருவின் திருவிளையாடல்கள்.

வருபவர்களுக்கு துன்பத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள்ளே அவனுடைய கர்ம வினைகளையெல்லாம் அறுத்தெறிந்து, வருகின்ற காலத்தை வெற்றி காலமாக மாற்றி அமைப்பதே அவருடைய திருவிளையாடல் ஆகும்.

இந்த உண்மையை உணர்ந்தால் நீ வாழ்விலே மோட்சத்தை பெறுவாய்.

இதை உணரவில்லை என்றால் மீண்டும் பிறப்பதும் இறப்பதுமாக இதே தொழிலாக செய்து, மறுத்து போகின்ற நிலைகள் உன்னுள்ளே ஏற்படும்.

துன்பத்தில் இன்பம்
உனது குரு உனக்கு நன்மைகளை மட்டுமே செய்திருக்கிறார் என்ற உண்மை நிலையை நெஞ்சுயர்த்தி உலகமெங்கும் பரை சாற்றிச் சொல்.

குரு உனக்கு துன்பத்தைக் கொடுத்திருந்தால், அதிகரிக்கச் செய்திருந்தால், உனது விதியானது சற்று மாற்றப்பட்டு, குறுகிய காலகட்டங்களுக்குள் நீ நன்மையை அடையவேண்டும் என்ற ஒரே நிலைகளை மட்டுமே கொண்டு அவர் அத்தகைய துன்பத்தை அளிக்கிறார் .

துன்பத்தை இன்பமாகக் கருதி அவர் வழியில் சென்றால் உனக்கு மோட்சத்தையே அளிப்பார்.