குருமகாத்மீயம் உருவான நோக்கம்

சத்குருவே சரணம்!சந்தோஷம்

இடைக்காடர் சித்தர் அருளியது!

சித்தலோகத்தில் இருக்கின்ற நாங்கள் ஸ்தூல தேகத்தை பெறாத காரணத்தால், எண்ணத்தாலும், சூக்குமத்திலும், பல காரியங்களை நிகழ்த்த முடியுமே தவிர, ஸ்தூல தேகம் கொண்ட ஒரு ஈஸ்வர பட்டம் தரித்த முக்கண்ணனாகிய முப்பெரும் ஜோதியால் மட்டுமே இந்த அகிலமானது ஒரு மாபெரும் ஏற்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

ஒரு தனி மனிதனுடைய நிலைகளுக்கு அல்லாமல், குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், ஒரு பொதுவான எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற தெய்வீக விருட்சமாக இந்த விருட்சம் விளங்க வேண்டும் என்பது எங்களுடைய அன்பு கோரிக்கை ஆகும்.

ஆகவே இந்த குருமகாத்மீயம் என்கின்ற கீதையை உரைக்க நாங்களே முற்பட்டு, அது உங்களின் குருவின் ஆக்கினைப்படி, இது எங்களின் கடமை என ஏற்றுச் செய்ய, அதற்குரிய நிலைகள் உருவாக்கப்பட்டது. இது காலத்தின் சூத்திரமாக, காலத்தின் சுழற்சியால் ஏற்பட்ட ஒரு நிகழ்வாகவே கருதவேண்டும்.

இந்த மகாத்மீயத்தின் மூலம் குரு-சீடன், சீடன்- குரு என்கின்ற நிலைகள், குருவின் பராக்கிரம நிலைகளை சீடன் எவ்வாறு உணர வேண்டும், அதனை ஒரு சீடன் எவ்வாறு தவறான பாதையில் அனுசரிக்கக் கூடாது என இயம, நியமங்கள் பற்றி கூறப்படும்.

இயம, நியமங்கள் தற்போது ஏதோ ஒரு குருட்டு அறிவில் தோன்றுகின்ற சம்பிரதாயமாக கருதப்படுகிறது.

அந்த ஆன்ம ஒளியை அடைவதற்காக ஏற்படும் சூழலே இந்த இயம, நியமங்கள் என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும்.

எவ்வாறு ஒரு சிவம் என்னும் நிலைகளில் பூதம் என்ற கணங்கள் இருந்து, எப்படி ஒரு வேல் என்ற நிலைகள் மனிதகுலத்தை உயர்த்தியதோ, அதேபோன்று பரஞ்சோதி வம்சம் இந்த முக்கண்ணனின் முப்பெரும் நிலையை இந்த மனிதகுலத்தினுள் உயர்த்தி மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்வதே இந்த தர்மத்தின் நோக்கம்.

இந்த தர்மத்தின் நிலைகளை நன்றாக ஏற்று, காரியத்தை விடுத்து, காரணத்தை பற்றி உங்கள் கடமையைச் செய்ய அதன் மூலம் இந்த வம்சம் விருத்தி பெற்று, இந்த வம்சம் நாடாளும்! தரணி ஆளும்! என்ற உண்மையை எங்கள் மொழியாக உரைத்தோம்!உரைத்தோம்! உரைத்தோம்!