குருமகாத்மீயம் – சிறிதளவு பிரயத்தனம் மலையளவு பலன்

சத்குருவே சரணம்!சந்தோஷம்!

(இடைக்காடர் சித்தர் அருளியது!)

மாபெரும் பிரபஞ்சமெனும் இந்த உள் தொனியை , சத்திய தீட்சையாக, சாயா தீட்சையாக இந்த உபதேச மூர்த்தி, ஒளி நிலையில் இப்பிரதமையை முச்சந்தியில் பதிக்க, ஜீவாத்மாவை பல்வேறு உயர்வை நோக்கி இட்டுச்செல்கிறது.

கலியுகம் முடிந்து சத்திய யுகம் தோன்றுகின்ற இந்த காலத்தில், முக்கண்ணனை போன்ற அவதார புருஷர்கள் தோன்றுவது கடினம்.

குருவைப் போல பிறப்பிலே ஞான அவதார நிலைகள் இல்லாத உங்களுக்கு, (பரஞ்சோதி வம்சம் என புரிந்து கொள்ளல்) சாதாரண நிலை கொண்டு முற்பிறவியிலே விட்ட எண்ணத்திலே இப்பிறவி வந்த காரணத்தால், பஞ்சபூதங்களாலும், நவகோள்களாலும், நட்சத்திர தோஷங்களாலும் ஏற்படுகின்ற சஞ்சலங்களை கடப்பது அவ்வளவு எளிதல்ல.

அதை விட கொடுமையானது சுக்ராச்சாரியாரின் அசுர, கந்தர்வ சக்திகள் மேலோங்கி இருக்கின்ற காரணத்தால், நல்லவர்கள் கொள்கின்ற சங்கல்பங்கள் கலையும்.

(உதராணத்திற்கு) பிரம்மச்சரிய விரதம் கொள்ள சங்கல்பம் கொண்டால் அது அன்றே கலையும்.

இந்த முக்கண்ணன், பரஞ்சோதி வம்சத்தினர் மீது அன்பும், காதலும், கருணையும் கொண்டதாலும், பிரம்மத்திடம் கொண்ட சங்கல்பத்தாலும் இந்த சூழ்நிலையில் நீங்கள் சிறிதளவு பிரயத்தனம் செய்தாலும் மலையளவு பலன் கிட்டும்.

ஏனென்றால் ஸ்தூலத்திலும், அரூபத்திலும், முக்கண்ணன் பரஞ்சோதி வம்சத்தை காத்து அருளுகிறார்.

முக்கண்ணனின் சங்கல்பங்கள் குருமகாத்மியத்தின் ஒரு பகுதியாக வர உள்ளது.

திசை மாற்றம் தேவை

இப்போதைய உங்களுடைய நிலையோ (பரஞ்சோதி வம்சத்தினர் என்று புரிந்து கொள்ளல்) வறட்டு அறிவால், இதுதான் தத்துவம், இதுதான் தவம் என அனர்த்தமாக கொண்டதாகும்!

அதை விடுத்து முக்கண்ணன் காட்டிய வழியில், உயர்ந்த சக்திகளை ஈர்த்து, ஆத்மத்துள் ஏற்படுகின்ற அறிவைக் கொண்டு, தர்மத்தோடு செயல்பட்டால், இந்தப் பூமியில் ஸ்தாபிக்கப்படவேண்டியவை குருவின் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க, பிறப்பில்லா நிலை ஏற்படும்.

ஏனென்றால் மீண்டும் ஒரு பிறவி வர, அது நரகத்தை விட கொடுமையான நரகமாக இருக்கும்.

நீங்கள் குருவை பார்க்கின்ற திசை எதிர்திசையாக உள்ளது.

குரு அவரது வலது புறம் கைகாட்ட முன்புறம் இருந்து பார்த்தால் இடது புறமாகவும் , பின்புறம் நின்று பார்த்தால் வலப்புறமாகவும் மாற்றாக தெரிவதை போல, தற்போது உங்களது பார்வை எதிர்திசையாகவே உள்ளது.

ஒரு திசைக்கே இப்படி என்றால் எண்ணிப்பார்க்கவும்.

முக்கண்ணன் வகுத்த வழிகளை சரியான முறையில் வாழ்க்கையில் பின்பற்ற எப்பேற்பட்ட ஏற்றத்தையும் உணரலாம்.

ஆகவே உங்கள் திசை மாற்றப்படவேண்டும்.

திசை மாற்றம் கொண்டால் போதாது; இத்தனை நாட்கள் எப்படி இருந்தோம் என்ற சுய ஆராய்ச்சியும் வேண்டும்.

ஆகவேதான் குருவை நேரே நோக்குகின்ற நேத்திர தரிசன முறை கூறப்பட்டது.

உங்களுக்கு எஞ்சி இருக்கின்ற காலத்துக்குள்ளாகவே உங்கள் சுயதர்மத்தை (சுதர்மத்தை) செய்து, மீண்டும் கருவறை தேடாத அற்புத நிலையைப் பெறவும்.